தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு


தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அதிகளவில் வருகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 14 Sept 2025 5:11 PM IST (Updated: 14 Sept 2025 5:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி, சத்யா ரிசார்ட்டில் நேற்று கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கூறியதாவது:

இன்று உங்களுக்கு வழங்கபட்ட பயிற்சியில் நான் கலந்து கொண்ட பின்னர் நபார்டு எந்த அளவிற்கு நாட்டின் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. பல்வேறு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது குறித்து காணொலி காட்சி வாயிலாக அறிந்து கொண்டேன்.

காலநிலை மாற்றம், நகர்ப்புற வளர்ச்சியின் மேம்பாட்டுக்கு உதவி செய்தல், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு தங்களது முயற்சியினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது மாவட்டத்திலும் நபார்டு சார்பாக பல புதிய முயற்சிகள் மற்றும் இங்கு இருக்கின்ற மக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இம்மாவட்டத்தின் பிரதிநிதியாக கேட்கிறேன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான பட்டியலிடப்பட்ட தேவைகளுக்கு நபார்டு உதவ வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்டவைகளுக்கு நபார்டு உறுதுணையாக இருந்த கொண்டிருக்கிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய நிலபரப்பின் காரணமாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் இங்கு இருக்கின்ற மக்களின் வாழ்வில் சிறு வகையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலும், இங்கு இருக்கின்ற அனைவரும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்ற கனவுடன் இருப்பீர்கள். நமது தூத்துக்குடி மாவட்ட மக்கள் கனவுடன் மட்டுமில்லாமல், அந்த கனவுக்காக உழைக்கக்கூடிய மக்களாக இருக்கிறீர்கள். எனவே நபார்டு இங்குள்ள மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:

கிராமப்புற உட்கட்டமைப்பு மற்றும் பசுமை நிதியுதவிக்கான நபார்டின் ஆதரவு குறித்த பயிற்சி பட்டறை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நபார்டு வங்கி நாட்டின் வளர்ச்சியில் எந்த அளவிற்கு பங்கெடுக்கிறது? எவ்வளவு பெரிய திட்டங்களுக்கு உதவி செய்கிறது? காலத்திற்கேற்றவாறு தனியார் பங்களிப்பிற்கும் நபார்டு வங்கி உதவி செய்வது குறித்து அறிந்து கொண்டோம்.

நமது மாவட்டத்திலும் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாக்கக்கூடிய வகையில் தொழில் தொடங்குவதற்கு நபார்டு உதவி செய்யும் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம், இங்கு இருக்கின்றவர்கள் தேவைப்படுகின்றவர்களுக்கும் எடுத்துக்கூறி பயன்பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா, உதவி கலெக்டர் (பயிற்சி) புவனேஷ்ராம், நபார்டு டிஜிஎம் சுதிர், நபார்டு ஏஜிஎம் சுரேஷ் ராமலிங்கம், அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story