கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு

சிவகாசி கோட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தாகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 19,300 பேர் மேல் முறையீடு
Published on

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1,000 மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் பல லட்சம் குடும்ப தலைவிகள் பயன்பெற்றனர். இந்தநிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற மனு செய்யப்பட்டவர்களின் பலரது மனுக்கள் தள்ளுபடி ஆனது. இவர்களில் தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் சிவகாசி கோட்டத்தில் உள்ள சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய தாலுகாவில் வசிக்கும் 19,273 பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் வருவாய்த்துறையினர் மூலம் சரி பார்க்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடுத்து வரும் காலங்களில் மகளிர் உரிமைத்தொகை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தவர்களிடம், வருவாய்த்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்ய உள்ளனர். சிவகாசி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த பணியினை கலெக்டர் ஜெயசீலன் நேற்று காலைஆய்வு செய்தார். அப்போது ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் ஆனந்தராஜ், அலுவலக மேலாளர் அகஸ்தீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com