சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகல்

சி.வி.சண்முகம் மட்டும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகல்
Published on

சென்னை,

போர்க்கொடி

தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்வியால் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அ.தி.மு.க. 2-ஆக உடைந்து மீண்டும் ஒன்றிணைந்தது. இருப்பினும் சி.வி.சண்முகம் மட்டும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சி.வி.சண்முகத்திற்கு பதில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பசுபதியை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. மேலும் இருதரப்பி னர் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டார்மங்கலத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் சி.வி.சண்முகம் தரப்பினருக்கும், பசுபதி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாகிகள் நீக்கம்

இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. இணைச்செய லாளர் ஆனந்தி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்ட 11 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்தடுத்து அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூண்டோடு விலகல்

இந்நிலையில், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விலகல் கடிதம் அளிக்க சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலக முடிவெடுத்து பேருந்துகள் மற்றும் கார்களில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.

சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் 300 பேர் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், தற்போது 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலக முடிவெடுத்துள்ளதால், அக்கட்சி அங்கு வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com