10 வயது பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொன்ற தாய் 3-வது கணவருடன் கைது

சென்னை திருவொற்றியூரில் 10 வயது பள்ளி மாணவியை எரித்துக்கொன்ற தாய், 3-வது கணவருடன் கைதானார்.
10 வயது பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொன்ற தாய் 3-வது கணவருடன் கைது
Published on

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 41). இவர், இந்தியன் ஆயில் கம்பெனியில் தற்காலிகமாக டேங்கர் லாரி ஓட்டி வருகிறார். இவருக்கும், ஜெயலட்சுமி (40) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

ஜெயலட்சுமிக்கு ஏற்கனவே பால்வண்ணன் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பிறந்த மகள், தூத்துக்குடியில் நர்சிங் படித்து வருகிறாள். பின்னர் பால்வண்ணன் பிரிந்து சென்றதால் அவருடைய 3-வது தம்பி துரைராஜ் என்பவரை ஜெயலட்சுமி 2-வதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு பவித்ரா (10) என்ற மகள் இருக்கிறாள். அவரும் பிரிந்து சென்றதால் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்த பத்மநாபனை ஜெயலட்சுமி 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

பத்மநாபன், தனது மனைவி ஜெயலட்சுமி, 2 குழந்தைகள் மற்றும் மனைவியின் 2-வது கணவருக்கு பிறந்த மகள் பவித்ரா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பவித்ரா, அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நடத்தையில் சந்தேகம்

மனைவி ஜெயலட்சுமியின் நடத்தையில் பத்மநாபன் சந்தேகப்பட்டு வந்தார். இது தொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தனது மகள் பவித்ராவை காப்பாற்றவே நான் 3-வதாக உங்களை திருமணம் செய்து கொண்டேன் என ஜெயலட்சுமி கூறினார்.

ஆனால் பத்மநாபன், அதை நம்பவில்லை. வேறு ஒருவருடன் உனக்கு தொடர்பு உள்ளதாக அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். அத்துடன் அடிக்கடி 2-வது கணவருக்கு பிறந்த மகள் பவித்ராவை, அவளது பாட்டி வீட்டில் விட்டு விடுமாறும் வற்புறுத்தி வந்தார்.

உயிருடன் எரித்துக்கொலை

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஜெயலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் பத்மநாபன் தகராறில் ஈடுபட்டார். அப்போது பத்மநாபன், உனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை என்றால் உன் மகள் பவித்ரா மீது சத்யம் செய் என்று கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலட்சுமி, மகள் பவித்ரா இருப்பதால் தானே இந்த பிரச்சனை என்று கூறி பவித்ரா உடலில் மண்எண்ணெயை ஊற்றி உயிருடன் தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் பவித்ரா அலறி துடித்தாள். உடனே கணவன்-மனைவி இருவரும் பவித்ரா உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதற்கிடையில் பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி தலைமையிலான போலீசார் பவித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பவித்ரா பரிதாபமாக உயிரிழந்தாள்.

3-வது கணவருடன் கைது

முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பவித்ராவிடம் மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் மரண வாக்குமூலம் பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து, பெற்ற மகளை உயிருடன் எரித்துக்கொன்றதாக தாய் ஜெயலட்சுமி மற்றும் அவருடைய 3-வது கணவர் பத்மநாபன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com