

நெல்லை,
நெல்லை அருகே பாளையங்கோட்டை தாலுகா நடுவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் - லட்சுமி தம்பதியின் மகள் தங்கம் (21 வயது). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மகாராஜா என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் தனிஷ்கா என்ற பெண் குழந்தை இருந்தது.
குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தங்கம், தனது குழந்தையை தூக்கிக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்தார்.
கடந்த சில நாட்களாக கணவரை பிரிந்த ஏக்கத்தில் தங்கம் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் தங்கத்தின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை 6 மணிக்கு வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது தாய் லட்சுமி, மகளையும், பேத்தியையும் பார்க்க அறைக்கு சென்றார். அங்கு ஒரு சேலையில் பேத்தியும், அருகே மற்றொரு சேலையில் மகளும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தொடர்ந்து அவர்கள், இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தங்கம், வாழ்க்கையில் விரக்தி அடைந்து, தனது மகளை முதலில் சேலையால் தூக்கில் போட்டு கொன்றுவிட்டு, பின்னர் தானும் மற்றொரு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் தங்கத்தின் சாவு குறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.