லாரி சக்கரத்தில் சிக்கி தாய்-மகன் பலி

தேனி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி சக்கரத்தில் சிக்கி தாய்-மகன் பலி
Published on

தேனி:

லாரி சக்கரத்தில் சிக்கினர்

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் சொந்தமாக சுற்றுலா வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி முருகேஸ்வரி (வயது 40).

இவர்களுக்கு ஒரு மகளும், பூபதிராஜா (20) என்ற மகனும் இருந்தனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.

பூபதிராஜா தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். நேற்று பூபதிராஜா தனது தாய் முருகேஸ்வரியுடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தேனிக்கு வந்து கொண்டிருந்தார்.

பழனிசெட்டிபட்டி டி.பி.என். சாலை சந்திப்பு பகுதியில் வந்த போது, அங்கு ஒரு மினிபஸ் சாலையில் திரும்ப முயன்றது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக பூபதிராஜா மோட்டார் சைக்கிளில் பிரேக் பிடித்தார்.

அவர்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் போர்வெல் லாரியின் சக்கரம் இருவர் மீதும் ஏறி இறங்கியது.

தாய்-மகன் பலி

இதில் பூபதிராஜா உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்த முருகேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவருடைய மகனின் உடலும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி முருகேஸ்வரியும் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து போர்வெல் லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியை சேர்ந்த ரவிக்குமார் மகன் மூர்த்தி (21) மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் ராசிங்காபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com