மோட்டார் சைக்கிள் விபத்து: புதுப்பெண் பலியான பரிதாபம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, கணவருடன் சென்ற புதுப்பெண் பலியானார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியை சேர்ந்தவர் நாகார்ஜுனா (வயது 29). தனியார் நிறுவன ஊழியரான இருவருக்கும், சென்னை திருவேற்காடு, அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஸ்வ பிரியா (25) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

நேற்று முன்தினம் மாலை, தனது கணவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்னை திருவேற்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு விஸ்வ பிரியா சென்றார். கவரப்பேட்டை-சத்யவேடு சாலையில் குருவராஜா கண்டிகை சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், நாகார்ஜுனா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நாகார்ஜுனா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த விஸ்வ பிரியா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com