

திண்டுக்கல் மேட்டுப்பட்டி, கோழிப்பண்ணை தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 59). மீன் வியாபாரி. நேற்று காலை இவர், தனது மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரம் செய்வதற்காக வடமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை கால்நடை மருத்துவமனை அருகே அவர் வந்தபோது, எதிரே ஊராளிபட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கஜேந்திரனும், சுப்பிரமணியும் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.