கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்; காங்கிரஸ் கட்சி நிர்வாகி பலி

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்- வேன் மோதிய விபத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி பலியானார்.
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்; காங்கிரஸ் கட்சி நிர்வாகி பலி
Published on

வேன்- மோட்டார் சைக்கிள் மோதல்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் மணி என்கிற ஆதிகேசவலு (வயது 66). இவர் ஏற்கனவே எலெக்ட்ரிக்கல் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி காங்கிரஸ் கட்சியின் நகர துணை செயலாளராக பதவி வகித்து வந்தார். நேற்று காலை கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த வேன் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட ஆதிகேசவலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com