வாகன ஓட்டுனர்கள் உயிர் காப்பாளராக இருக்க வேண்டும்

வாகன ஓட்டுனர்கள் உயிர் காப்பாளராக இருக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
வாகன ஓட்டுனர்கள் உயிர் காப்பாளராக இருக்க வேண்டும்
Published on

வாகன ஓட்டுனர்கள் உயிர் காப்பாளராக இருக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

உலக விபத்து காய தினம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக விபத்து காயதினத்தை முன்னிட்டு வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜோஸ்பின் அமுதா, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட வள மைய அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது:- ஆண்டு தோறும் அக்டோபர் 17-ந் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாள வேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

மதுஅருந்தி விட்டு வாகனம் ஓட்ட கூடாது

வாகன ஓட்டுனர்கள் சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை தவிர்க்க முடியும். மது அருந்திவிட்டு வாகனம் இயக்க கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட கூடாது.

அதிவேகம் செல்வது, இருக்கை பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்றவற்றை தவிர்த்து கவனமாக செயல்பட வேண்டும். ஓட்டுனர்கள் அனைவரும் பயணிகளின் உயிர் காப்பாளராக இருக்க வேண்டும்.

உறுதிமொழி

அவசர ஊர்தி வரும்வரை ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவது, எலும்பு முறிவு ஏற்பட்ட இடம் நகராமல் இருக்க கட்டுப்போடுவது உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகளை செய்ய வேண்டும்.காயங்களை குறைக்கவும், காயத்தால் பாதிக்கப்பட்டவரை பாதுகாக்கவும் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, உடல் காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழியினை அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com