நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழக மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை அதிகளவில் திறந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பஹ்ரைன் நாட்டின் அஹ்லியா பல்கலைக்கழகத்துடன் நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் சர்வதேச தமிழ் பொறியாளர்கள் மன்றத்துடன் இணைந்து மாநில அளவிலான பல்வேறு திறன் பயிற்சிகள் அளிப்பதற்கான ஒப்பந்தங்கள் உள்பட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) இங்கு கையெழுத்தாகி இருக்கிறது. பொதுவாகவே, பொறியாளர்கள் என்று சொன்னால் எதையுமே நேர்த்தியாக செய்யக் கூடியவர்கள். அதிலும் தமிழ் பொறியாளர்களை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய கட்டுமானங்கள், அணைகளைக் கட்டிய பெருமை நம்முடைய தமிழர்களுக்கு உண்டு.
இன்றைக்கு உலகத்தில் எந்த நாட்டுக்குப் போனாலும், அங்கு நாம் சந்திக்ககூடியவர்கள் தமிழ் பொறியாளர்கள்தான். அதுவும் மிகப்பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் நம்முடைய தமிழ் பொறியாளர்கள்தான்.
தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளை அதிகளவில் திறந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. கல்லூரிகளைத் தொடங்கியதோடு மட்டும் நிற்கவில்லை. பொறியியல் படிக்க நுழைவுத்தேர்வு தேவை இல்லை என்று ரத்து செய்ததும் அவர்தான். ஏழை, எளிய மாணவர்கள் பொறியியல் படிக்க வேண்டும் என்று, முதல் தலைமுறையாக படிக்க வருகின்றவர்களுக்கு அவர்களுடைய கட்டணத்தை அரசே ஏற்கும் வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியவரும் கருணாநிதிதான்.
இன்றைக்கு அவரால்தான், ஒவ்வொரு வருஷமும், இந்தியாவுலேயே அதிகமான பொறியியல் பட்டதாரிகள் வெளியில் வருகின்ற மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. கருணாநிதி உருவாக்கிய டைடல் பார்க், ஐடி காரிடார்ஸ், ஆட்டோமொபைல் ஹப் மூலமாக இன்றைக்கு தமிழ்நாட்டு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து கொண்டிருக்கிறது.
அரசுப்பள்ளியில் படித்துவிட்டு, உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்ற மாணவர்களுடைய முழு கல்வி செலவையும், கட்டணச்செலவையும் அரசே ஏற்கும் என்கிற முக்கியமான திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார். நான் முதல்வன் ஸ்கவுட் திட்டம் மூலமாக, ஆண்டுக்கு 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பி பயிற்சியையும், வேலைவாய்ப்பையும் அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






