

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன்குடியிருப்பு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 28). பனை ஏறும் தொழிலாளி.
இவருக்கும்,நெல்லை மாவட்டம் ஆயன்குளத்தை சேர்ந்த நந்தினி (23) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி திருமணம் நடந்தது. புதுமண தம்பதியான இவர்கள் சின்னமாடன்குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி நந்தினிக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை வீட்டில் உள்ளவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலயே நந்தினி பரிதாபமாக இறந்தார்.
இதனால் முத்துகிருஷ்ணன் மனம் உடைந்து காணப்பட்டார். அவர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து முத்து கிருஷ்ணன் மயங்கி கிடந்தார்.
உடனடியாக முத்துகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.