முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்திடம் இருந்து உரிய பதில் வரவில்லை- கேரள மந்திரி

நாங்கள் இப்போது உச்ச நீதிமன்றத்தை நம்பி முன்னேறி வருகிறோம் என்று கேரள மந்திரி கூறினார்.
முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்திடம் இருந்து உரிய பதில் வரவில்லை- கேரள மந்திரி
Published on

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலம் கோட்டயத்தில் நீர்வளத்துறை மந்திரி மோன்ஸ் ஜோசப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழகத்துடன் பேச்சு வார்த்தையை தொடர கேரளம் அரசு விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய முதல்-அமைச்சர்கள் மாநாட்டின் போது, முதல்-மந்திரி வி.டி.சதீசனும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஆனால், தமிழகத்திடம் இருந்து இதுவரை உரிய பதில் எதுவும் வரவில்லை. இதனை கேரளம் அரசு தீவிர மாக எடுத்துக்கொள்கிறது.

முல்லைப் பெரியாறு விஷயத்தில் கேரளம் மக்களின் பாதுகாப்பைக் கருத் தில் கொண்டு, முல்லைப்பெரியாறில் ஒரு புதிய அணையைக் கட்டுவதே இதற்கான தீர்வு. தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை முழுமையாக வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் தேவை. கேரளத்துக்கு மக்களின் பாதுகாப்பு முக்கியமானது. இரண்டு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், இந்த பிரச்சினையில் ஒருமித்த கருத்தை எட்ட முடியுமா? என்பது குறித்து இரு மாநிலங்களும் விவாதிக்கும். நாங்கள் இப்போது உச்ச நீதிமன்றத்தை நம்பி முன்னேறி வருகிறோம்.

அதே நேரத்தில், கேரளத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கும் பொருட்டு, இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையை தீர்த்து வைக்க மத்திய அரசை ஒரு மத்தியஸ்தராக கொண்டு வரவும், அதனைச் சம்மதிக்க வைக்கவும் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com