தளி அருகே நிலத்தகராறில் பயங்கரம்:டிரைவர் சரமாரி வெட்டிக்கொலைமனைவி, மகன் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தளி அருகே நிலத்தகராறில் பயங்கரம்:டிரைவர் சரமாரி வெட்டிக்கொலைமனைவி, மகன் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே நிலத்தகராறில் டிராக்டர் டிரைவரை அவருடைய சகோதரரே சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். படுகாயம் அடைந்த டிரைவரின் மனைவி, மகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிராக்டர் டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள கும்ளாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). டிராக்டர் டிரைவர். அதே ஊரை சேர்ந்த ரமேசின் பெரியப்பா மகனான நெசவு தொழிலாளி கோட்டப்பா (38) என்பவருக்கும், ரமேசுக்கும் வீட்டின் அருகில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 5.15 மணி அளவில் கோட்டப்பா தனது கூட்டாளிகள் சிலருடன் ரமேஷ் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். அப்போது தகராறு முற்றியதில் ரமேஷ், அவருடைய மனைவி மற்றும் மகனை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாக்க தொடங்கினர்.

வெட்டிக்கொலை

அவர்களிடம் இருந்து தப்பி சென்ற ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கோட்டப்பா, அவரது கூட்டாளிகள் சேர்ந்து தளி-ஆனேக்கல் சாலையில் கும்ளாபுரம் சனீஸ்வரன் கோவில் அருகே சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் தலை, கழுத்து, கை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் ரமேசுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவருடைய மனைவி சாரதா (40), மகன் ரவி (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆனேக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வலைவீச்சு

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையுண்ட ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநிலத்துக்கு தப்பி சென்ற கோட்டப்பா மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தளி அருகே நிலத்தகராறில் டிராக்டர் டிரைவரை அவரது தம்பியே கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com