முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்
Published on

வத்திராயிருப்பு பகுதி நீர் வளம், நிலவளம் மிகுந்து செழிப்புடன் இருக்க காரணம் வத்திராயிருப்பில் எழுந்தருளியுள்ள மழைக்கு அதிபதியான முத்தாலம்மன் தான் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஒரு வார காலம் விழா எடுத்து இப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 4-ந் தேதியன்று கலை விழாவுடன் தொடங்கியது.கலை விழாவின் முடிவில் நேற்று அதிகாலை தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலையில் முத்தாலம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.

தேர் ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து நிலையை அடைந்தது. பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க அம்மனை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் எழுந்தருள செய்தனர். மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் கரகம் கரைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முத்தாலம்மன் பக்த சபை நிர்வாகிகள், பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com