

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் உரையாற்றிய முதல்-அமைச்சர் விஜய், "திமுகவினர் என்ன பேசினாலும், மிசாவைப் பார்த்தவர்கள், மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். எல்லாருக்கும் அந்த மிசாவைப் பற்றிய வரலாறு நன்றாக தெரியும்" என்று கூறி ஒரு சைகையை காட்டினார். இந்த சைகை கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்-அமைச்சரின் இந்த சைகைக்கு கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம், "அவசரநிலை காலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதல்-அமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது உள்நோக்கம் கொண்டதில்லை என்று முதல்-அமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.