

தானிப்பாடி அருகே மாயமான விவசாயி ஆற்றுப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.
விவசாயி மாயம்
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35), விவசாயி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
பெருமாள் குடும்பத்துடன் தானிப்பாடி அருகில் உள்ள சே ஆண்டப்பட்டு கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற பெருமாள் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பெருமாளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தானிப்பாடி போலீசில் புகார் செய்தனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் தானிப்பாடி அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், மாயமான பெருமாள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.