

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே நள்ளிரவில் பெண் போல் வேடமணிந்து வந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் மர்ம நபர் ஒருவராலும், அவனது கைவரிசை அடங்கிய அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகளாலும் அந்த பகுதி மக்களிடையே பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இரணியல் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவன் நடமாட்டம் இருந்து வந்துள்ளது. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஏதோ ஒரு பெண் நடந்து வருவது போல தோன்றினாலும், அவனது உடல் அசைவுகள் மற்றும் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின.
பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு, முகத்தை துணியால் மூடியபடி வரும் அந்த மர்ம ஆசாமி, ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை குறிவைத்து வீடு வீடாக சென்று பூட்டை உடைக்க முயல்வதும், கண்ணில் படும் பொருட்களை திருடி சென்றுள்ளார்.
அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், அந்த மர்ம நபர் பெண் வேடமிட்டு நள்ளிரவில் நடந்து வரும் காட்சிகள் மிக துல்லியமாக பதிவாகியுள்ளன.
இந்த திருட்டு சம்பவம் குறித்து பொதுமக்கள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீஸ் படையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.