

செங்கல்பட்டு,
தாம்பரம் அருகே இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் ஹெல்மெட் அணிந்தபடி வீடுகளுக்குள் நுழைந்து, இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபர்களின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக சி.டி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் குறிவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் விரைந்து கைது செய்து, தொடர் திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.