என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த 2-ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜர்
Published on

சென்னை,

தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாக கிடைத்த தகவலின்பேரில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ம் தேதி சோதனை நடத்தினர்.

6 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் சிக்கியது என்ன? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து என்.ஐ.ஏ. வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்த சோதனையில் ஒரு மடிக்கணினி, 7 செல்போன், 8 சிம்கார்டுகள், 4 பென் டிரைவ்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பான சட்டவிரோதமான புத்தகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.' என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சாட்டை துரைமுருகன், பாலாஜி, ரஞ்சித்குமார், முருகன், மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு என்.ஐ.ஏ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

என்.ஐ.ஏ. சம்மனை அடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன் உள்பட 3 பேர் விசாரணைக்காக ஆஜராகினர். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com