

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பூரில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருப்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர் இன வரலாற்றில் மறக்க முடியாத நாள் மாவீரர் நாள். தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர் ஈந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை போற்றும் புனிதநாள். உலகெங்கும் உள்ள தமிழ் இன மக்கள் இந்த நாளை போற்றி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர் கட்சி இதை சடங்காக கடைபிடிப்பதில்லை. எங்களுக்குள் இருக்கிற இன உணர்வு, மான உணர்வு, போராட்ட உணர்வை இருமடங்காக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்கிறோம்.
தமிழர்கள் பெருமையோடு வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரை கொடையாக கொடுத்தவர்கள் எங்கள் மாவீரர்கள். உலக வரலாற்றில் எந்த இனத்திலும் நடந்திராத மாபெரும் புரட்சி. எனவே மலர் தூவி, ஈகை சுடர் ஏற்றி மாவீரர்களை போற்றுகிற நாளாக கடைபிடிக்கிறோம்.
ஏற்கனவே நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனித்துப்போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.