மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் நாகை அணி வெற்றி

நாகை புதிய கடற்கரையில் நடந்த மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் நாகை அணி வெற்றி பெற்றது.
மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் நாகை அணி வெற்றி
Published on

வெளிப்பாளையம்:

நாகை புதிய கடற்கரையில் நடந்த மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் நாகை அணி வெற்றி பெற்றது.

பீச் வாலிபால் போட்டி

'பத்மஸ்ரீ' டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளையொட்டி நாகை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி நாகை புதிய கடற்கரையில் நடந்து வந்தது.

கடந்த 25-ந் தேதி தொடங்கி தாடர்ந்து 4 நாட்கள் போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து 100 ஆண்கள் அணியும், 50 பெண்கள் அணியும் கலந்து கொண்டன. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை லீக் சுற்றுகளாகவும், நாக் அவுட் சுற்றுகளாகவும் போட்டிகள் நடந்து வந்தது.

நாகை அணி வெற்றி

நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி போட்டியில் பள்ளி அளவிலான போட்டியில் மாணவர்கள் பிரிவில் முதல் இடத்தை தூத்துக்குடி அணியும், 2-ம் இடத்தை நாகை அணியும், 3-ம் இடத்தை மயிலாடுதுறை அணியும் பிடித்தன. மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை சென்னை அணியும், 2-ம் இடத்தை ஆத்தூர் அணியும், 3-ம் இடத்தை சேலம் அணியும் பிடித்தன.

ஆண்கள்(பொது) பிரிவில் நடந்த போட்டியில் முதலிடத்தை நாகை பி அணியும், 2-ம் இடத்தை நாகை நம்பியார் நகர் அணியும், 3-ம் இடத்தை நாகை ஏ அணியும் பிடித்தன.

அதேபோல பெண்கள்(பொது) பிரிவில் முதல் இடத்தை சென்னை ஏ அணியும், 2-ம் இடத்தை சென்னை பி அணியும், 3-ம் இடத்தை சீர்காழி அணியும் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

இதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.பள்ளி அளவில் முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.4 ஆயிரமும், 3-ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.3 ஆயிரமும், 4-ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது.பொது பிரிவில் முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.8 ஆயிரமும், 3-ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.5 ஆயிரமும், 4-ம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது.விழாவில் நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தமிழ்நாடு கைப்பந்து சங்க இணை செயலாளர்கள் மகேந்திரன், மணி, ஜெயக்குமார், துணைத்தலைவர் சீலர், மாவட்ட செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் ராஜேஷ், புரவலர் ஆல்பிரட்ஜான், இணைச்செயலாளர் சிவராமன், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com