நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 11-ந்தேதி வரை ரத்து

நாகை -இலங்கை இடையே இயக்கப்படும் கப்பல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து 11-ந்தேதி வரை ரத்து
Published on

நாகை,

நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறை குறித்து ஆய்வு செய்யும் வணிக கடல்சார் துறை அதிகாரிகள் சென்னையில் இருந்து நாகை வந்து நாகை -இலங்கை இடையே இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், இந்த குறைபாடுகளை சரிசெய்யும் வரை கப்பல் சேவையை ரத்து செய்ய சென்னை வணிக கடல் சார்துறை சார்பில் கடிதம் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து கப்பல்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் 11-ந்தேதிக்கு பின்னர் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாகை-இலங்கை காங்கேசன் துறை இடையே திட்டமிடப்பட்ட பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com