

திருச்சி,
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வரும் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப் பட இருப்பதால் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன்படி நாகர்கோவிலில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் (எண்: 16321) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக கரூர் சென்று கோவைக்கு புறப்படும். அன்று இந்த ரெயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, அம்பா துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் வழியாக செல்லாது.
இதேபோல் நாகர்கோவிலில் இருந்து வருகிற 13-ந்தேதி காலை 6.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 16352) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். அந்த நாட்களில் திண்டுக்கல் வழியாக வராது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.