

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பெட்டிக்கடையில் போதைப்பாக்குகளை விற்பனை செய்ததற்காக நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி, சிறைக்காவலர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. விசாரணைக் கைதி உயிரிழந்தது தெரிந்தும் அதை மூடி மறைக்க முயன்றதாகவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவை உண்மை எனில் காவல்துறை, சிறைத்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த ஈத்தங்காடு கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்ற உடற்திறன் மாற்றுத்திறனாளி, அவர் நடத்தி வந்த பெட்டிக்கடையில் 200 கிராம் குட்கா எனும் போதைப்பாக்கை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகக் கூறி கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி நேற்று முன்நாள் திங்கள்கிழமை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவம் பயனின்றி சபரிநாதன் உயிரிழந்த நிலையில், அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்து விட்டதாகக் கூறி மூடி மறைக்க காவல்துறையினர் முயன்றதாக கூறப்படுகிறது.
ஆனால், சபரிநாதன் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரை சிறைக்காவலர்கள் கொலை செய்து விட்டு, அதை மூடி மறைக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் சபரிநாதனின் உடலில் 19 காயங்கள் இருந்ததும், குறைபாடுள்ள வலது கை 3 இடங்களில் உடைக்கப்பட்டிருந்ததும், இடது கை, இரு கால்கள், தலை, மார்பு ஆகிய உறுப்புகளும் கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அதன்பிறகு தான் இதற்கு காரணமான நாகர்கோவில் தலைமை சிறைக்காவலரும், இரு சிறைக்காவலர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நாகர்கோவில் சிறையில் சபரிநாதனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் மன்னிக்க முடியாதது. சிறைக்காவலர்களை கோபப்படுத்தும் வகையில் கூட அவர் எதுவும் செய்யவில்லை. ஒரு தவறும் செய்யாத என்னை எதற்காக சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டு அவர் தொடர்ந்து ஓலமிட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த சிறைக்காவலர்கள் அவரது கைகள் மற்றும் கால்களைக் கட்டி, படுக்க வைத்து கொடூரமாக தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சபரிநாதன் ஞாயிற்றுக் கிழமை இரவே இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை திங்கள் கிழமை காலை உயிருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்குதான் அவர் உயிரிழந்து விட்டதாகவும் சிறைத்துறையினர் ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றியுள்ளதாக கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சபரிநாதன் உயிரிழந்த பிறகும் கூட அவர் இயற்கையாகவே மரணமடைந்ததைப் போலவும், அவரது மறைவுக்கும் சிறைத்துறையினரின் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த காவல்துறையும், சிறைத்துறையும் முயன்றதாக கூறப்படுகிறது. இறந்து போன சபரிநாதனின் உடலை உடனே வாங்கிச் சென்று தகனம் செய்யவும் உறவினர்களுக்கு காவல்துறை அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப் படுகிறது. ஆனால், அதற்கு குடும்பத்தினர் உடன்பட மறுத்து போராடியதால் தான், தாமதமானாலும் கூட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இல்லாவிட்டால் இந்தக் கொலை மூடிமறைக்கப்படிருக்கும்.
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் பெனிக்ஸ், ஜெயராஜ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் வரிசையில் தவெக ஆட்சியில் சபரிநாதனின் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்தே இந்த கொலையை மூடி மறைக்க முயற்சிகள் நடந்த நிலையில், தமிழக காவல்துறையினர் விசாரித்தால் இந்த வழக்கில் நீதி கிடைக்காது. எனவே, சாத்தான்குளம், மடப்புரம் வழக்கின் விசாரணைகள் எவ்வாறு சிபிஐக்கு மாற்றப்பட்டனவோ? அதேபோல், இந்த வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்களுக்கு வழக்கின் விசாரணை முடியும் வரை பிணை மறுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிந்தைய இரு மாதங்களில் காவல்துறையினரின் காவலில் இருந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அதற்கான காரணங்களை கண்டறியவும் விசாரணைக்கு ஆணையிட வேண்டும். கொடூரமாக கொல்லப்பட்ட சபரிநாதனின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.