

சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்ததன் மூலம் நம் பாரத தேசத்திற்கும், தமிழகத்திற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்த கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த செஸ் ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த உயரிய தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையை பெற்றிருக்கும் அவர், தனது அபாரமான திறமை, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இளம் வயதிலேயே உலக செஸ் அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் பிரக்ஞானந்தா, எதிர்காலத்திலும் மேலும் பல உயரங்களை எட்டி, இந்தியாவின் புகழை உலகெங்கும் பரப்புவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அவர் தொடர்ந்து பல வெற்றிகளையும், புதிய சாதனைகளையும் குவித்து, நாட்டிற்கும் தமிழகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.