ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி மனு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் அளித்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யக்கோரி நளினி மனு - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். அவருடன் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் பேரறிவாளனுக்கு பலமுறை பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட்டு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் 142 வது சட்டப்பிரிவின் மூலமாக தங்களையும் விடுதலை செய்யவும், பேரறிவாளனை போன்று தங்களையும் ஜாமீனில் விடுவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதனை தொடர்ந்து நளினி மற்றும் ரவிச்சந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக அளித்த மனு மீது மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com