

சுதந்திர போராட்ட வீரரான நல்லகண்ணு (வயது 101), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 1-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டதால், தற்போது அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ (செயற்கை சுவாச கருவி) உதவியுடன் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரத்த கொதிப்பு, சிறுநீரக கோளாறு, உணவை விழுங்க முடியாமை உள்ளிட்ட பாதிப்புகளுடன் நல்லகண்ணு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவருடைய உடல்நிலையில் நேற்று முன்தினம் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் அதிகரிக்கப்பட்டது. இப்போது அவருடைய உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகளின் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன் 24 மணி நேர தொடர் அதி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.