

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101). வயதுமூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தீடிரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் சென்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் (ஜனவரி) 8 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுக்கு மீண்டும் கடந்த 1 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நல்லகண்ணுவின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகி உள்ளன. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்த தகவல் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.