நாங்குநேரி சம்பவம்: பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு - டிடிவி தினகரன் விமர்சனம்

திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சம்பவம்: பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய  திமுக அரசு - டிடிவி தினகரன் விமர்சனம்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அடையாளம் தெரியாத கும்பல் பெட்ரோல் குண்டு வீசி நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழப்பு - பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறிய கஞ்சா மாடல் திமுக அரசை வரும் தேர்தலின் மூலம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்புவோம்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே போதையிலிருந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, அவ்வழியே பயணிப்போர் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியதில் வடமாநிலத் தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இதே திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு பீடத்தில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் தற்போது, பொதுமக்கள் பயன்படுத்தும் பிரதான சாலையில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், எந்த குற்றமும் செய்யாத அப்பாவிகள் பலரும் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் களைந்து பொதுமக்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டிய திமுக அரசு, அன்றாடம் அரங்கேறும் குற்றங்களைத் தடுக்க தவறியும், அதனைத் திசை திருப்பும் நோக்கத்தில் உதவித் தொகை எனும் பெயரில் பணம் கொடுத்து மக்களை சரிக்கட்ட நினைப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒருபோதும் செல்லுபடியாகாது.

எனவே, இத்தகைய கொடூரச் செயல்களை அரங்கேற்றிய அடையாளம் தெரியாத நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தும் அதே நேரத்தில், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தைச் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்குத் தள்ளிய திமுகவின் ஆட்டமும் கொட்டமும் வரும் சட்டமன்றத் தேர்தலோடு முடிவடைவது உறுதி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com