

பனைக்குளம்
ராமநாதபுரம் எம்.பி. .நவாஸ்கனி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் இலங்கைக்கான இந்திய தூதருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறிருப்பதாவது, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சார்ந்த மீனவர்கள் 12 பேர், 2 விசைப்படகுகளில் நெடுந்திவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்த போதும், அவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றார்கள். இந்தநிலையில் மீண்டும் 12 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து இருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. வெளியுறவுத்துறை அமைச்சகம் இதில் உடனடியாக தலையிட்டு ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க விரைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.