

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் மனைவி தர்மம்மாள் (வயது 59). நேற்று இவர், பெருமாள்கவுண்டன்பட்டியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து ஆட்டோவில் தன்னுடன் வேலை பார்த்த பெண்களுடன் மீனாட்சிபுரத்திற்கு வந்து கொண்டிருந்தார். ஆட்டாவின் பின்னால் தர்மம்மாள் அமர்ந்திருந்தார். ஆட்டோவை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சேகர் (43) என்பவர் ஓட்டினார்.
அம்மாபட்டி பிரிவு அருகே வந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ ஏறி இறங்கியது. இதில் ஆட்டோவின் பின்புறம் அமர்ந்து இருந்த தர்மம்மாள் கீழே விழுந்தார். இதையடுத்து அவரை ஆட்டோவில் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கன்னியப்பன் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.