கூடலூர் அருகேலாட்டரி சீட்டுகள் கடத்திய 2 பேர் கைது

கூடலூர் அருகே லாட்டரி சீட்டுகள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடலூர் அருகேலாட்டரி சீட்டுகள் கடத்திய 2 பேர் கைது
Published on

குமுளியில் இருந்து கம்பம் நோக்கி வந்த கேரள மாநில அரசு பஸ்சில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கூடலூர் மந்தை வாய்க்கால் பாலம் அருகே கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் பஸ்சின் இருக்கைக்கு அடியில் துணி பையில் லாட்டரி சீட்டுக்கள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான அந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், தேனியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சாந்தி (வயது 50), சின்னமனூர் அருகே உள்ள கீழபூலாநந்தபுரம் பகுதியை சேர்ந்த முத்து (71) ஆகியோர் லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற டொம்புச்சேரியை சேர்ந்த காளிராஜ் (49) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 72 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com