

கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கெச்சிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் மகேஷ்குமார் (வயது 24). கூலித் தொழிலாளி. இவருக்கும் கெச்சிலாபுரம் நடுத்தெருவை சேர்ந்த சண்முகராஜ் மகன் மாதேஷ்குமார் (23) என்பவருக்கும் கோவில் திருவிழா தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மகேஷ்குமார் அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாதேஷ்குமார், அவரிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று மாதேஷ்குமார் கத்தியால் மகேஷ்குமாரை குத்திவிட்டு ஓடிவிட்டாராம். இதில் காயமடைந்த மகேஷ்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் கழுகுமலை சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து மாதேஷ்குமாரை தேடி வருகிறார். இதேபோல் மாதேஷ்குமாரின் தந்தை சண்முகராஜ் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக கொடுத்த புகாரின்பேரில் மகேஷ்குமார், அவரது அழகர்சாமி, தொழிலாளி சின்னப்பன் மற்றும் அவரது மகன் அன்புராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.