

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சுகுணா (வயது 67). நேற்று முன்தினம் இவர், பெரியகுளத்திற்கு தனது காரில் சென்றார். காரை ராகுல் என்பவர் ஓட்டினார். இவர்கள் மீண்டும் அங்கிருந்து தேனி அல்லிநகரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். தேனி பைபாஸ் சாலையில் சருத்துப்பட்டி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு கார் இவர்களது கார் மீது நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் சுகுணா, டிரைவர் ராகுல், மற்றொரு கார் டிரைவர் அஸ்வத்தாமன், அதில் வந்த பொம்முராஜ், சீனிவாசன், குமரேசன், மணிகண்டன் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகுணா தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.