சத்தியமங்கலம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

சத்தியமங்கலம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
சத்தியமங்கலம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
Published on

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

வயதான தம்பதி

சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் கரிய கவுண்டர் (வயது 68). இவருடைய மனைவி ராஜம்மாள் (65). இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்து வீட்டில் தங்கிக்கொண்டு விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வயதான காலத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வாழ்கிறோமே. நாம் உயிருடன் இருந்து என்ன புண்ணியம் என்று புலம்பிக்கொண்டு இருந்தனர். அதன்பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டனர்.

தீக்குளித்தார்

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராஜம்மாள் வீட்டில் இருந்து மண்எண்ணெய் கேனுடன் வெளியே வந்தார். பின்னர் அருக காலியாக இருந்த தோட்டத்துக்கு சென்று, மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அவர் உடல் கருகி அலறி துடித்தார். சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டு இருந்த கரியகவுண்டர் எழுந்து வெளியே ஓடிவந்தார். பின்னர் பதறி அடித்து மனைவி மேல் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார்.

அதன்பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒரு தனியார் ஆம்புலன்சில் ராஜம்மாளை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜம்மாள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com