தஞ்சை அருகே:மனைவி, மகனுடன் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை

தஞ்சாவூர் அருகே கடன் பிரச்சினை காரணமாக மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
தஞ்சை அருகே:மனைவி, மகனுடன் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை
Published on

தஞ்சை,

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மனோ நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜா (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். திருவையாறில் டீக்கடையும் நடத்தி வந்தார். இவரது மனைவி கனகதுர்கா (32). மகன் ஸ்ரீவத்சன் (11) தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் வசிக்கும் ராஜாவின் சகோதரர் வினோத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த குரல் பதிவு தகவலில், கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக ராஜா கூறியுள்ளார். இதுகுறித்துபோலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளப்பெரம்பூர் போலீசார் நிகழ்விடத்துக்குச் சென்று பார்த்த போது 3 பேரும் வீட்டில் பிணமாகக் கிடந்தனர்.

இதில், ராஜாவுக்கு வணிகத்தில் கடன் சுமை அதிகரித்ததால், தான் குடியிருக்கும் சொந்த வீட்டை மற்றொருவருக்கு விற்றுள்ளார். ஆனால் வீட்டு மீதான வங்கிக் கடன் நிலுவையில் உள்ளதால், விற்பனை செய்த பணம் ராஜாவுக்கு வந்து சேரவில்லை. இதனிடையே கடன் நெருக்கடி அதிகரித்ததால், ராஜா தனது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தன் மனைவியுடன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com