

காஞ்சிபுரம்,
திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. திமுகவின் மூத்த நிர்வாகிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், ஸ்ரீபெரம்புத்தூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குடிநீர், சாலை, மக்கள் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசியதோடு தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் இன்னும் நீடித்து வருவதாக அவர் கூறினார்.
மேலும் அதிமுக அரசு செயல்படுத்தி வரும் அம்மா மினி கிளினிக் திட்டம் குறித்து பேசிய அவர், ஆரம்ப சுகாதார நிலையங்களை முறையாக நடத்த முடியாத நிலையில் மினி கிளினிக் திட்டம் தேவையா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பினார்.