

சென்னை,
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள் வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைபாளர் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், பொதுவாக நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அந்த நீதி விரைந்து கிடைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. ஆனால், நீதிமன்றங்களே அநீதியான தீர்ப்பை வழங்கும் நடைமுறை இலங்கை நாட்டில் இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.
இலங்கைக்கு பல உதவிகளை செய்துகொண்டிருக்கும் நாடு இந்தியா. இப்படிப்பட்ட உதவி செய்கின்ற நட்பு நாடான இந்திய நாட்டு மீனவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்த சொல்வதும், அவர்களை துன்புறுத்துவதும், சிறைபிடிப்பதும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவதும் செய்நன்றி மறத்தலாகும்.
சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதில் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.