நீட் தேர்வு: நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீட் தேர்வு விவகாரத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு: நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இன்று 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் முன்னாள் கவர்னர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியது . முதல் கேள்வியாக பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் கேள்விக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அதனை தொடர்ந்து பேரவை விதி எண் 110-கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் விவகாரத்தில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதிபட உள்ளது. எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும் அது ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும்.

நீட் விலக்கு மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. ஜனாதிபதியிடம் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு மனு அளித்துள்ளது. அனைத்து கட்சி குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார். உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த நிலையில், அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நீட் விவகாரத்தில் மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறித்துவிட்டது. மத்திய அரசின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை.

நீட் விவகாரத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்ளவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com