

சென்னை,
நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை என இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.
தவெக ஆதரவு கட்சிகளின் 2வது கூட்டம் செப்.9ம் தேதி நடைபெறவுள்ளது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் உள்ளிட்டோர் நேரில் அழைப்புவிடுத்தனர்.
கட்சியில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் வீரபாண்டியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூ மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எங்களை சந்தித்த அமைச்சர்களுடன் அரசியல்தான் பேசினோம்.அமைச்சர்களாக இல்லாமல் தவெகவை சேர்ந்த நிர்வாகிகளாக எங்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நாங்கள் அரசியல் பேசினோம். இந்திய அரசியலில் மத்திய அரசின் நாடாளுமன்ற ஜனநாயக மீறல் குறித்தும், இந்தியா கூட்டணியின் பொறுப்பு, கடமை அதிகரித்திருப்பது குறித்து பேசினோம். எதிர்கால அரசியல் குறித்து எங்கள் கருத்தை கேட்டனர்.
தவெகவின் முதல் கூட்டணி கூட்டம், ஒரு விருந்து தான். விருந்தில் கூட்டணி குறித்து பேசுவதில் உடன்பாடில்லை. அந்த தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து அன்றே முதல்வரை சந்தித்து விளக்கிவிட்டோம். கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு, அதில் உறுதியாக இருக்கிறோம்
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை (05.09.26) நடைபெறவுள்ளது. நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை. தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகிறோம். தவெக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்போமா என்பதை கட்சிதான் முடிவு செய்யும். அதிகாரத்தில் கவர்னர் அமர கூடாது என்பதற்காகவே தவெக ஆட்சிக்கு ஆதரவு தருகிறோம். மதச்சார்பின்மையை நோக்கி நகரும் வரை தவெக விமர்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.