நெல்லை: கொலை முயற்சி அடிதடி வழக்குகளில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் சங்கர்கணேஷ், மகாராஜன் ஆகிய 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கொட்டாரக்குறிச்சி, வடக்கு தெருவை சேர்ந்த உச்சிமாகாளி மகன் சங்கர்கணேஷ் (வயது 33), கொட்டாரக்குறிச்சி, மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மகாராஜன்(34) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்சொன்ன நபர்கள் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் மோசடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், சங்கர்கணேஷ், மகாராஜன் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று (8.5.2025) அடைக்கப்பட்டனர்.