புதிய கண்டுபிடிப்பு போட்டி: தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு நெல்லை டி.ஐ,ஜி. பாராட்டு

நெல்லை மாணவர் பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார்.
என்.சி.சி. மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்பு போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற நெல்லையைச் சேர்ந்த என்.சி.சி. மாணவன் டேவிட் சாலமோனுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பா.மூர்த்தி கேடயம் வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தேசிய அளவில் என்.சி.சி. மாணவர்களுக்கு இடையேயான புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி.யில் உள்ள 9ம் வகுப்பு மாணவன், டேவிட் சாலமோன் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று தனது கண்டுபிடிப்பிற்காக முதல் பரிசு பெற்றுள்ளார். அம்மாணவன், பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார்.
அம்மாணவனின் கண்டுபிடிப்பு அகில இந்திய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. முதல் பரிசு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவன் டேவிட் சாலமோனுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பா.மூர்த்தி கேடயம் மற்றும் மரக்கன்று வழங்கி பாராட்டினார். மேலும் அவர் அம்மாணவனுடைய கண்டுபிடிப்பு குறித்து முழுமையாக கேட்டறிந்து அம்மாணவன் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்தினார். இந்த நிகழ்வில் வரம் அறக்கட்டளை நிறுவனரும் பொறியாளருமான நாகராஜ், தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி. அலுவலர் அருள்ராஜ், தமிழ்நாடு என்.சி.சி. 5வது பட்டாலியனை சேர்ந்த சுபேதார் பாண்டி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோபாலகிருஷ்ணன், சதீஷ்குமார், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






