நெல்லை: ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ

பைக்கில் சென்றவர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
நெல்லை: ஸ்கூட்டரில் சென்றவர் மீது  திமுகவினர் சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ
Published on

நெல்லை,

தஞ்சையில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்திலும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசினார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரையடுத்து, உதயநிதி ஸ்டாலினை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து தஞ்சை போலீசார் இன்று கைது செய்தனர். அதேவேளை, உதயநிதியை விசாரணைக்குப்பின் இன்றே விடுதலை செய்வோம் என்றும் அவரை சிறையில் அடைக்கும் எண்ணமில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, பல இடங்களில் திமுகவினர் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவினர் தாக்குதல்

இந்நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள சாலையில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் பைக்கில் சென்ற இளைஞரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த இளைஞரை திமுகவினர் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் சென்ற இளைஞரை திமுகவினர் தாக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக தஞ்சையில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். காவிரியில் ஒருசொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதுபற்றி இன்று இருக்கும் முதல்-அமைச்சர் வாயை திறந்து பேசவில்லை.

முதல்-அமைச்சருக்கு இருக்கும் ஒரே கவலை திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பதுதான்’ என்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், நடிகை ஒருவரின் பெயரை கூறி கூச்சலிட்டனர்.

அப்போது தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எங்கே தண்ணீர் வருகிறதோ இல்லையோ அங்கே தண்ணீர் வர வேண்டும்... நான் காவிரியை கூறினேன்’ என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com