நெல்லை ஆணவக் கொலை: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கவினின் தந்தை சந்திப்பு


நெல்லை ஆணவக் கொலை:  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன்  கவினின் தந்தை சந்திப்பு
x

தன்னுடைய இளைய மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கவினின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை,

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் தந்தை இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உடனிருந்தார். தன்னுடைய குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தன்னுடைய மகன் கவின் ஆணவக் கொலையில் கூலிப்படையினரின் தொடர்பு இருப்பதால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தன்னுடைய இளைய மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கவினின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், பதிவிட்டுள்ளதாவது: "ஆணவக் கொலை செய்யப்பட்ட தம்பி கவினின் தந்தை சந்திரசேகருடன் இன்று தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "அண்மையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தை சந்திரசேகர் இன்று முதல்வரை நேரில் சந்தித்து தன்னுடைய குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கவின் ஆணவக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். அந்த கொலையில் கூலிப்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. எனவே, யாரும் தப்பித்துவிடாமல் இருக்கக் கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

அத்துடன் அவருடைய இளைய மகனுக்கு அரசு வேலைவாய்ப்பு வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்திருக்கிறார். முதல்வர் கனிவுடன் கோரிக்கைகளை செவி மடுத்தார். நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று பெரிதும் நம்புகிறோம். குறிப்பாக அவருடைய மனைவி பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு அவரது சொந்த பகுதியிலேயே அந்த கிராமத்திலேயே வேலை செய்யக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். வெளியே செல்வது பாதுகாப்பற்ற ஒரு சூழலாக இருக்கிறது என்கிற கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவற்றையெல்லாம் பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார்.இப்போதைக்கு கவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் கோரிக்கையை மட்டுமே முதல்வரிடத்தில் நாங்கள் பேசி இருக்கிறோம். ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம், வலியுறுத்தியும் வருகிறோம். நாங்கள் முதல்வரிடத்தில் 'மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு' என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சில கோரிக்கை மனுக்கள் வழங்கி இருக்கிறோம் " என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story