நெல்லை: தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை

அம்பை பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.
நெல்லை: தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதம் - விவசாயிகள் கவலை
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பை, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

அம்பை அருகே கோவில்குளம் பகுதியில் நதியுன்னி கால்வாய் பாசனம் மூலமாக கார்பருவ சாகுபடி, பிசான சாகுபடி என இரு பருவங்களில் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதி விவசாயிகள் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் பயிரிட்டு இருந்தனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்த நிலையில் தொடர் மழையால் கோவில்குளம் பகுதியில் அறுவடைக்கு தயாரான சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. அந்த நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கின. நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையில் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவு செய்து நெல் பயிரிட்டு இருந்தோம். நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த 4 நாட்களாக பெய்த தொடர்மழையால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால், நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியவில்லை. நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கியதால் வீணாகின. எனவே மழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com