பஸ் நிறுத்தத்தில் கடும் வாக்குவாதம்.. மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகன்

மனைவியுடனான பிரச்சினையை தீர்க்க வந்த மாமியாரின் கை விரலை மருமகன் கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஸ் நிறுத்தத்தில் கடும் வாக்குவாதம்.. மாமியார் கை விரலை கடித்து துப்பிய மருமகன்
Published on

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலை மகன் துரைராஜ் (வயது 33), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து-பேச்சியம்மாள் தம்பதியின் மகள் தங்கலட்சுமிக்கும் திருமணம் நடத்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு உருவானது.

இதனால் மனவேதனை அடைந்த தங்கலட்சுமி தனது 3 குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 7 மாதங்களாக தங்கலட்சுமி தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் தங்கியுள்ளார். நேற்று காலை தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த துரைராஜ், தனது மனைவியிடம் பேசினார்.

திடீரென இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, தங்கலட்சுமி தனது செல்போன் மூலம் தாய் பேச்சியம்மாளை தொடர்புகொண்டு நடந்த விவரத்தை கூறியுள்ளார். உடனே பேச்சியம்மாளும் அந்த பஸ் நிறுத்தத்துக்கு ஓடி வந்தார். அங்கு துரைராஜ் மற்றும் தங்கலட்சுமி இடையேயான வார்த்தை மோதலை தடுக்க முயன்றார்.

ஆனால் மாமியாரை கண்டதும் துரைராஜ் மேலும் ஆத்திரமடைந்தார். 3 பேருக்கு மத்தியில் மாறி மாறி வாக்குவாதம் நடந்ததால், துரைராஜ், தனது மாமியார் பேச்சியம்மாளின் கையை பிடித்து இழுத்து அவரது விரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் பேச்சியம்மாளின் கை விரல் கிழிந்து தொங்கியது. இதனால் படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார்.

அப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனே பேச்சியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com