நெல்லை: 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


நெல்லை: 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
x

ஏ.என்.பி.ஆர். அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமரா என்பது சோதனைச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் பதிவெண்களை துல்லியமாக பதிவு செய்து தரவல்லது ஆகும்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), கே.டி.சி. நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ஐ.டி.ஐ., பழையபேட்டை ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் புதிதாக ஏ.என்.பி.ஆர். (Automatic Number Plate Recognition- ANPR) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏ.என்.பி.ஆர். அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமரா என்பது சோதனைச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் பதிவெண்களை துல்லியமாக பதிவு செய்து தரவல்ல அதிநவீன கேமரா ஆகும்.

மேலும் இந்த கேமராவானது வெளிச்சம் இல்லாத மற்றும் இரவு நேரங்களிலும் அகச்சிவப்பு கதிர்கள் (Infrared Rays) மூலம் வாகன எண்களை துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காண உதவும். மேலும் இந்த கேமராக்கள் மூலம் வாகனத்தின் பதிவெண், நிறம் மற்றும் வாகனத்தின் வகை ஆகியவற்றின் அடிப்படையிலும் சோதனைச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களை துல்லியமான முறையில் அடையாளம் காணலாம். இந்த கேமராக்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வாகனங்களில் தப்பிச் செல்லும் நபர்களை உடனடியாக அடையாளம் காண பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் மாநகர எல்கைக்குள் சோதனைச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து விதமான வாகனங்களும் முழுநேர (24 X 7) காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story