மோதலை தூண்டும் வீடியோ பதிவு: நெல்லையில் வாலிபர் கைது


மோதலை தூண்டும் வீடியோ பதிவு: நெல்லையில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 April 2025 11:27 AM IST (Updated: 15 April 2025 1:44 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இன்ஸ்டாகிராமில் இரு பிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான், பருத்திகுளம், காலனி தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜ்குமார் (வயது 30) என்பவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து கங்கைகொண்டான் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து கங்கைகொண்டான் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக வீடியோவை வெளியிட்ட ராஜ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story