

சென்னை,
டாஸ்மாக் கடைகளில் வாகனங்களில் பாஸ்ட் ஸ்கேனர் எனப்படும் கருவியில் நேரடியாக காலி மது பாட்டில்கள் வாங்கப்பட உள்ளன.
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை வாங்கிய கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ திரும்ப ஒப்படைப்பதன் மூலம், ரூ.10-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்திட்டத்தை டாஸ்மாக் ஊழியர்கள் கையாளும் நடைமுறைக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இத்திட்டம் முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டு மாற்றியமைக்கப்படும் என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. டாஸ்மாக் பணியாளர்கள் அல்லாத பிற நபர்களைக் கொண்டு பாட்டில்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தானியங்கி கருவியில் காலி பாட்டிலை வாங்கவும், அதன் வாயிலாக, 10 ரூபாயை திரும்ப வழங்கவும் டாஸ்மாக் முடிவு செய்தது. சோதனை ரீதியாக பீரோ வடிவில் உள்ள தானியங்கி கருவி, சென்னை எழும்பூரில் உள்ள ஒரு மது கடையில் வைக்கப்பட்டது.
அந்த கருவி பாட்டிலை தானாகவே உள்ளே எடுத்துக்கொள்ளும். பின்ன்ர் யு.பி.ஐ., கணக்கிற்கு காலி பாட்டிலுக்கான தொகை செலுத்தப்படும். பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் போதிய இடவசதி இல்லாமல், குறைந்த சதுர அடியில் இயங்கி வருகின்றன.
அந்த கடைகளில் பீரோ வடிவிலான தானியங்கி கருவிகளை வைக்க இடம் இல்லை. எனவே குறைந்த இட வசதியுடன் தினமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மது வகைகள் விற்பனையாகும் கடைகளில் 'பாஸ்ட் ஸ்கேனர்’ எனப்படும் கருவியில் நேரடியாக வாகனங்களில், காலி பாட்டில்கள் வாங்கப்பட உள்ளன. இது சென்னை திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூரில் தலா ஒரு கடையில் சோதனை ரீதியாக வைக்கப்பட்டு பாட்டில்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, வாகனத்தில் ஸ்கேனர் கருவியுடன் பணியாளர் இருப்பர். அவரிடம் காலி பாட்டிலை கொடுத்ததும் அதில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை கருவியில் ஸ்கேன் செய்து பாட்டிலை பெற்று கொண்டு 10 ரூபாய் திரும்ப வழங்குவர். இதன் வாயிலாக ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பாட்டில்களை திரும்ப பெற முடியும் என்று கூறப்படுகிறது. வாகனத்தில் சேகரிக்கப்படும் காலி பாட்டில்கள், டாஸ்மாக் நியமிக்கும் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.